ராமநாதபுரம், ஏப்.13: ராமேஸ்வரம்- மதுரை இடையே ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு மதுரை மாநகரை தான் தேர்வு செய்கின்றனர். ராமேஸ்வரம்-மதுரை இடையே 165 கி.மீ தூரம் என்பதால் பேருந்து பயணத்தை விட குறைந்த கட்டணம், சொகுசு பயணத்திற்காக ரயில் பயணத்தை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். மேலும், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அரசு துறைகளில் பணியாற்றுவோரும் உரிய நேரத்தில் இயக்கிய ரயில்களை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவினால் கடந்தாண்டு மார்ச் 25 முதல் ரயில் போக்குவரத்து நாடு முழுவதும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமலில் ஒரு சில தளர்வுகளை அடுத்து முக்கிய நகரங்களில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதன்படி சென்னை-ராமேஸ்வரம் இடையே மாலை, இரவு நேர சிறப்பு விரைவு, அதிவிரைவு ரயில்கள் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது.