சேலம், ஏப். 10:சேலத்தில் 6பேரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருநங்கைகள் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அன்னதானப்பட்டி கருவாட்டுமண்டி பகுதியை சேர்ந்தவர் சுவேதா. (33). திருநங்கை. இவருடைய தம்பி பார்த்திபன். கடந்த 13ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மதுபாட்டில் வாங்கி வரும்படி பார்த்திபனை அடித்தனர். இதில் காயமடைந்த பார்த்திபன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதேபகுதியை சேர்ந்த சுரேஷ், உரிச்சகோழி என்ற வசந்த், அங்கமுத்து, புட்டு என்ற தமிழ்செல்வன் ஆகியோர் பார்த்திபனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4பேரையும் போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே கடந்த 5ம் தேதி பார்த்திபனின் வீட்டுக்கு சென்ற சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள், அங்கிருந்த திருநங்கை சுவேதா, பார்த்திபன், காயத்ரி, சாந்தி, சத்தியநாராயணன், பழனிசாமி ஆகியோரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் 5பேருக்கு காயம் ஏற்பட்டது.