சாத்தான்குளம், ஏப்.8: சாத்தான்குளத்தில் பைக் திருடும் கும்பல் உலா வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் நாளுக்கு நாள் பைக் உள்ளிட்ட இதர வாகனகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அத்தியாவசிய பொருளாகவும் மாறி வருகிறது. சாத்தான்குளத்தில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் கையில் 10க்கு மேற்பட்ட சாவியுடன் வந்துள்ளார். தச்சமொழியில் உள்ள ஓட்டல் அருகில் நின்ற பைக் ஒன்றை கள்ள சாவி போட்டு அவர் எடுத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவரை விசாரித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அவர் தான் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் என கூறியதாக கூறப்படுகிறது. அவர் பல பைக் சாவியுடன் இப்பகுதியில் நடமாடி வருவதாக பொதுமக்கள் தரப்பில் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் திருட்டு நடக்காமல் இருக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.