தொண்டாமுத்தூர்,ஏப்.5: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தனது இறுதி கட்ட பிரசாரத்தை காலையில் கோவைப்புதூர் மைதானத்தில் துவக்கினார். தொடர்ந்து குனியமுத்தூர்,கரும்புக்கடை,ஆர்.எஸ்.புரம்,பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, காந்தி பார்க்,வேடப்பட்டி பஸ் ஸ்டாப், களிக்க நாயக்கன்பாளையம், குளத்துப்பாளையம், தொண்டாமுத்தூர்,தேவராயபுரம், வெள்ளிமலை பட்டிணம், நரசிபுரம், போளுவாம்பட்டி,செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்துவாரயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி,தென்கரை,பேரூர் என சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு நேற்று இரவு 7 மணி அளவில் செல்வபுரம் ஜங்ஷனில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பொதுமக்களின் மத்தியில் பேசியதாவது:மூன்றரை லட்சம் கோடி தமிழகத்தின் வரிப்பணம் அதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு கொடுத்து விடுகிறோம். அது எங்கே செல்கிறது. உத்திரபிரதேஷ்,பீகார் இது போன்ற மாநிலங்களுக்கு நமது வரிப்பணம் செலவிடப்படுகிறது. நமது பசங்க,பிள்ளைங்களுக்கு வேலை இல்லை. முதியவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. இந்த கொடுமைகளையெல்லாம் எடப்பாடியார் தட்டி கேட்க வேண்டாமா, அடிமை ஆட்சி தான் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக அமைச்சர்கள் பலூன் குத்தி விளையாடுவதிலும், ஆற்றில் தெர்மாக்கோல் விடுவதிலும் காலத்தை கழித்துள்ளனர். ஊழலில் திளைத்த அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்.