வேட்டவலம் அருகே விவசாயிகள், மாடு வியாபாரியிடம் ₹1.88 லட்சம் பறிமுதல்

வேட்டவலம், மார்ச் 29: வேட்டவலம் அருகே விவசாயிகள், மாடு வியாபாரியிடம் பறிமுதல் செய்த ₹1.88 லட்சம் ரொக்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். வேட்டவலம் அடுத்த ராஜந்தாங்கல், தளவாய்குளம் தண்டரை சாலை ஆகிய இடங்களில் நேற்று, தேர்தல் நிலை கண்காணிப்பு குழு தலைவர்கள் கண்ணன், சண்முகம் தலைமையில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சையத் முபாரக், தலைமை காவலர் மணி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த 2 லோடு ஆட்டோ, பைக் ஆகியவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த மாடு வியாபாரி பூசமணி மற்றும் வேட்டவலம் அடுத்த கீழ்கரிப்பூர், ஜமீன் அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராஜகோபால், வெங்கடேசன் ஆகியோர், தளவாய்குளம் சந்தைக்கு உரிய ஆவணம் இன்றி ₹1,88,250 ரொக்கம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: