திருவண்ணாமலை, மார்ச் 29: திருவண்ணாமலையில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 13வது மாதமாக பங்குனி மாத கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். மேலும், கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையும் நிலையில், கிரிவலம் செல்வதை தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 3.12 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 1.18 மணிக்கு நிறைவடைந்தது. எனவே, திருவண்ணாமலையில் நேற்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.