நெல்லை, மார்ச் 29: பாளை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வகாப், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறான நேற்று பாளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பிரார்த்தனைக்கு வந்த கிறிஸ்தவ மக்களை அப்துல் வகாப் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். பாளை தியாகராஜநகர் யூதாததேயூ தேவாலயம், பெருமாள்புரம் சிஎஸ்.ஐ. தேவாலயம், நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் துதியின் கோட்டை தேவாலயம், பாளை ஊசிகோபுரம் கதீட்ரல் பேராலயம், அரசு பொறியியல் கல்லூரி அருகே கிறிஸ்துவின் சேனை தேவாலயம், கேடிசி நகர் ஆத்துமநேசர் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களுக்கு ெசன்று கிறிஸ்தவ மக்களை சந்தித்து ஆதரவு திரட்டியதோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை அமோக வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
திமுக வேட்பாளர் அப்துல்வகாப் தேவாலயங்களில் ஆதரவு திரட்டினார்
இதனிடையே வேட்பாளர் அப்துல்வகாப்புடன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வேணுகோபால், முன்னாள் மாவட்ட தலைவர் உமபாதி சிவன், ராமேஸ்வரன், பொன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பாளை தெற்கு பஜார், யாதவர் உச்சினி மகாளியம்மன் கோவில்தெரு, ஆயிரத்தம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர்.
மஜ்லிஸுல் உலமா சபை திமுகவுக்கு ஆதரவுஇதனிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மஜ்லிஸூல் உலமாக சபை ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து மேலப்பாளையம் நகர உலமா சபை தலைவர் முகமது இல்யாஸ், செயலாளர் முகம்மது ஆஷிக் இலாகி, பொருளாளர் அப்து அமீது மற்றும் நிர்வாகிகள் பாளை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வகாப்பை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்னர் தலைவர் முகம்மது இல்யாஸ் கூறுகையில், ‘‘மாநில ஜமாத் உலமா முடிவின்படி தமிழகத்தில் சகோதரத்துவம் தழைத்தோங்க சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தரப்படுகிறது. அந்த அடிப்படையில் பாளை தொகுதியில் திமுக வேட்பாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். மதச்சார்பற்ற நல்லாட்சி அமைய இந்த ஆதரவு தரப்படுகிறது என்றார்.' இதனிடையே நிர்வாகிகள் வேட்பாளர் அப்துல் வகாப்பில் கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்: மேலப்பாளையம் மஜ்லிஸுல் உலமா சபை துவங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 700 உறுப்பினர்களை கொண்டுள்ளபோதும் உலமாவிற்காக சொந்தமான கட்டிடம் ஏதும் இல்லை. எனவே இதற்காக ஒரு கட்டிடம் ஏற்படுத்தி தரவேண்டும். உலமாக பென்ஷனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். வயது முதிர்ந்து உலமாக்களுக்கு இலகுவாக பென்ஷன் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசலில் இருந்து ஆசாத் ரோடு வழியாக டவுன் செல்லும் பாதை முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிவரை போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. அதை சீர்படுத்தவேண்டும். மேலப்பாளையம் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அப்போது திமுக மாணவர் அணி அமைப்பாளர் ரம்ஜான் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.