செந்துறை அருகே நத்தகுழி திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூர், மார்ச் 21: செந்துறை அருகிலுள்ள நத்தகுழி திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள நத்தகுழி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த மார்ச் 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது, தொடர்ந்து மக்கள் நலமுடன் வாழ மகாபாரதம் பாடப்பட்டது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன், தனது பரிவாரங்களுடன் சிறு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை 5.30 மணிக்கு சிறுதேர்வடம் பிடிக்கப்பட்டு, தேர் கோயில் அருகில் உள்ள தீமிதி திடல் அருகே வந்ததும் காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் பெரியாகுறிச்சி, சோழன்குடிக்காடு, இலைக்கடம்பூர், மணப்பத்தூர், படைவெட்டிக்குடிக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: