அரியலூர், மார்ச் 20: செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, ரேஷன் கடை, குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக்கூறி வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம தெருக்களில் இளைஞர்கள் கருப்புக்கொடி கட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள வஞ்சினபுரம் ஊராட்சிக்குட்பட்ட நல்லநாயகபுரம் கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாலைகள் போடப்படாமல் குண்டும் குழியுமாக பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த இரண்டு முறை ஊராட்சி தலைவர் வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்தவராகவும், இந்தமுறை பெரும்பாண்டி கிராமத்தை சேர்ந்தவராகவும் உள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் அடிப்படை தேவைகளை செய்யவில்லை என குற்றம்சாட்டினர் கிராமத்தினர்.