காஞ்சிபுரம், மார்ச் 19: காஞ்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து சென்ற வடமாநில வாலிபர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ் நிலையம் வெளியே காமராஜர் சாலையில் கீரை, காய்கறி, பழக்கடைகள் உள்ளன. இங்கிருந்து ஏராளமானோர் காய்கறி, கீரைகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், ஒரு பையை இரண்டு கைப்பிடிகளையும் தனித்தனியாக பிடித்து எடுத்து வந்தனர்.அங்கு, பஸ் நிலைய நுழைவாயில் திருப்பத்தில், அந்த பையை வைத்துவிட்டு சென்றனர். இதை பார்த்ததும், அங்கு கீரை வியாபாரம் செய்யும் பெண்கள் கூச்சலிட்டனர். உடனே அந்த வாலிபர்கள், அங்கிருந்து தப்பியோடி மறைந்துவிட்டனர்.பின்னர், காய்கறி கடைக்காரர்கள் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் ஒரு பிளாஸ்டிக் பாக்சில் மருந்துகள் நிரப்பப்பட்டு திரியை வெளியே தெரியும்படி நாட்டு வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அதை எடுத்து மழை நீர் செல்லும் கால்வாயில் போட்டு விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.