லாக்கப் மரணத்தில் கடும் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

சென்னை: நாகர்கோவில் லாக்கப் மரணத்தில் தவறுகள் நடத்திருந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:  முதலமைச்சர் ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி, காவல் நிலையத்திலோ அல்லது சிறையிலோ எந்த இடத்திலும் காவல்துறை அல்லது சிறைத்துறையினரின் தவறுகளால் மரணம் ஏற்பட்டால், அரசு கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

புழல் சிறையில் நடந்த மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இருந்தால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மரணத்தைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், ஆதரவும் கண்டிப்பாக வழங்கப்படும்.

தவெக அரசு வந்த பிறகு பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் போலி பத்திரங்களை ரத்து செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூர் உள்பட பல இடங்களில் செய்யப்பட்ட போலி பத்திரப் பதிவுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

* மனைவிக்கு மாற்றுப்பணி கிடைத்ததை ஒப்புகொண்ட அமைச்சர்
அமைச்சர் நிர்மல் குமார் மனைவி பல்லாவரத்திலிருந்து திருவல்லிக்கேணி அரசு பள்ளிக்கு மாற்று பணி வாங்கியுள்ளதாக நேற்று முன்தினம் செய்தி வெளியாகியது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த மாதம் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் மனைவி என்ற காரணத்தால் அவருக்கு மாற்று பணி வழங்கியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமாரிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பலாக பதில் அளித்தார்.

‘பல்லாவரத்திலிருந்து திருவல்லிகேணிக்கு பணி மாறுதல் வாங்கவில்லை. மாற்றுப்பணியில்தான் (டெப்டேஷன்) உள்ளார். இதை பெரிதுப்படுத்த தேவையில்லை’ என கூறினார். ஆனாலும், பணி மாறுதல் மற்றும் மாற்றுப்பணி இரண்டும் ஒரே அர்த்தம்தான் வரும் என்று கூறினர். இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நிருபரிடம் இந்த செய்தியை ஒளிப்பரப்ப வேண்டாம் என அமைச்சர் நிர்மல்குமார் கேட்டுக்கொண்டார்.

Related Stories: