லங்கா கார்னர் பாலத்தில் தீ

கோவை, மார்ச்.12: கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மதியம் தீப்பிடித்தது. குப்பையில் யாரோ பீடி புகைத்து விட்டு தீப்பற்ற வைத்துவிட்டு சென்றுள்ளனர். தீ வேகமாக பரவியதில் ரயில் தண்டவாளம் வரை புகை மூட்டத்துடன் எரிந்தது. ரயில் பாதை அருகே கேபிள் ஒயர் மற்றும் செல்போன் நிறுவன ஒயர்கள் அதிகளவு இருந்தது. இந்த ஒயர்களும் தீப்பிடித்து எரிந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புகை மற்றும் தீயின் காரணமாக அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் தவிப்படைந்தனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில்கள் தீ அணைக்கும் பணி முடியும் வரை அனுமதிக்கப்படவில்லை. தீப்பிடித்ததால் கேபிள் மற்றும் செல்போன் தொடர்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. செல்போன் நிறுவனத்தினர் பழுது சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: