சாத்தான்குளம், மார்ச் 8: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சாத்தான்குளத்தில் அதிமுக, காங்கிரஸ் பிரமுகர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிந்துள்ளனர். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இதன் சுற்றுச்சுவரில் அதிமுக சார்பில் சுவர் விளம்பரமும், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியை வரவேற்றும் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. தற்போது சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தேர்தலுக்கு முன்னர் வரையப்பட்ட அரசியல் கட்சி விளம்பரங்களை கட்சியினரே அழிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஒழுங்குமுறை விற்பனை கூட அரசு சுவரில் வரையப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை. இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் மீது எஸ்.ஐ சத்தியபாமா வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.