திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன் (22). கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததோடு, மகளுக்கும், அய்யலூர் பகுதியை சேர்ந்த வீரமணி(24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இருவரும் சிறுமலையில் வசித்து வந்தனர்.
திருமணத்திற்கு பின்னும் பெண்ணின் செல்போனுக்கு, அரவிந்தன் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியும், பேசியும் வந்துள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திருமணமாகி விட்டதால், இனிமேல் தனது செல்போனுக்கு எந்தவிதமான எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கணவர் வீரமணியிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அரவிந்தன் எஸ்எம்எஸ் அனுப்பியபடி இருந்துள்ளார். இதனால் தனது மனைவி செல்போன் மூலமாகவே சிறுமலைக்கு வருமாறு அரவிந்தனுக்கு வீரமணி எஸ்எம்எஸ் அனுப்பினார். அதன்படி கடந்த 14ம் தேதி அரவிந்தன் சிறுமலையில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீரமணி அவரிடம் தகராறு செய்து, ‘‘என் மனைவிக்கு எஸ்எம்எஸ் மற்றும் போன் செய்து ஏன் தொல்லை கொடுக்கிறாய்’’ என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த வீரமணி அரிவாளால் அரவிந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டின் அருகிலேயே சிறிய அளவிலான பள்ளத்தை தோண்டி அரவிந்தனின் உடலை புதைத்தார். மேலும் அதன் மீது குப்பைகளை கொட்டி யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இதுகுறித்து வீரமணி நேற்று முன்தினம் தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ஊரிலுள்ள முக்கிய நபர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நேற்று அதிகாலை சம்பவ இடத்துக்கு விரைந்த திண்டுக்கல் புறநகர் போலீசார் கொலை செய்யப்பட்ட அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வீரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
