மதுராந்தகம், ஜூன் 15: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். மேலும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இடைத்தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதற்கான அதிகாரிகளையும் நியமித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கரிக்கிலி, வேடந்தாங்கல், தண்டரைப்பேட்டை, தண்டலம், கோழியாளம், உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்துகொண்டு நடைபெற உள்ள இடை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி வைப்பது குறித்தும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்தும், கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தம்பு, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், மாவட்ட கவுன்சிலர் மாலதி, அவைத்தலைவர் சிவபெருமான், ஒன்றிய துணைச் செயலாளர் வேதாச்சலம், நிர்வாகிகள் சிலம்பரசன், தசரதன், பிரேம்ராஜ், தேவ், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
