கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள ஒரு கிராம பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி, மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர், திடீரென அவரை கீழே தள்ளி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதில், படுகாயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் 8 தையல்கள் போடப்பட்டது. தொடர்ந்து, அவரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், ஊத்தங்கரை பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
* 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: 29 வயது வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியாயி (60), கடந்த இரு நாட்களுக்கு முன் அலாவுதீன் என்பவரது வீட்டின் திண்ணையில் பெரியாயி படுத்திருந்தபோது அவ்வழியாக வந்த சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (29) என்பவர் மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியாயி வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.
