தென்காசி, மார்ச் 3: தென்காசி மேலப்புலியூர் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர், சந்தன மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவில் பூந்தட்டு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மேலப்புலியூர் சந்தன மாரியம்மன் கோயிலில் மாசி மாத கொடை விழா கடந்த 23ம்தேதி காலையில் கால் நாட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் அம்மனுக்கு முழுக்காப்பு அலங்கார சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மாலையில் வில்லிசை ஆரம்பித்து இரவில் சாஸ்தா பிறப்பு பூஜை நடந்தது.