வலசையூர் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை

அயோத்தியாப்பட்டணம், மார்ச் 3:  ஆளும்கட்சியினருக்கு மட்டும் நகை கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி, வலசையூர் கூட்டுறவு வங்கியை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அதிமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நகைகடன் வழங்கி மோசடியில் ஈடுபடுவதாக கூறி, வலசையூர், பள்ளிப்பட்டி, தைலானூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வலசையூர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 26ம்தேதி தமிழக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தது. ஆனால் வங்கியில் அதிமுகவினருக்கு வேண்டிய நபர்களுக்கு, அறிவிப்புக்கு முன்பு நககைளை அடமானம் வைத்து கடன் பெற்றதாக, 40 பவுன் வரை தள்ளுபடி செய்து வங்கியில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஏழை, எளியோருக்கு நகைகடன் வழங்கப்படவில்லை. தள்ளுபடியும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு வழங்கினர்.

Related Stories: