ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளின் போது வாக்காளர்கள் பயன்படுத்த 19 லட்சம் கிளவுஸ் ஆர்டர் கொடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 526 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குபதிவு நாளின் போது, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பாக சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைகளை சுத்தம் செய்த பிறகு வாக்களிக்க கைக்கு கிளவுஸ் வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.