வாலிபர் மீது கார் மோதல் உரிமையாளர் மீது தாக்குதல்

திருமங்கலம், மார்ச் 2: திருமங்கலம் அருகே நான்குவழிச் சாலையை கடக்க முயன்ற வாலிபர் கார் மோதி படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் கார் மற்றும் அதன் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). உரக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் காரில் தனது கடையில் பணிபுரியும் தென்காசி பிரபாகரன்(30) என்பவருடன் ஈரோடுக்கு சென்றார். காரை டிரைவர் மகேந்திரன்(50) ஓட்டினார். பின்னர் மதுரை வழியாக நேற்று முன் தினம் இரவு ஊருக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். திருமங்கலத்தை அடுத்துள்ள சமத்துவபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த ரஞ்சித்(21) நண்பர்களுடன் நான்குவழிச்சாலையை கடந்துள்ளார். ராஜ்குமார் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரஞ்சித்குமார் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமாரின் நண்பர்கள் காரை தாக்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த டிரைவர் மகேந்திரன், காரில் இருந்த பிரபாகரன் இறங்கி தப்பியோடிவிட்டனர். ராஜ்குமார் மட்டுமே இருக்க அவரை ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த ராஜ்குமார் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த ரஞ்சித் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: