வேலூர், மார்ச் 2: தமிழகத்தில், சுகாதாரப்பணியாளர்கள், கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள், சட்டசபை தேர்தல் பணியாற்ற உள்ள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 4.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 877 பேருக்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான நாள்பட்ட நோயாளிகள் என 1.06 கோடி பேருக்கு நேற்று முதல் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். அதில் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள், கோவின் செயலியில் பதிவு செய்து, தடுப்பூசி போட்டு கொள்ள வரலாம். அவ்வாறு பதிவு செய்ய முடியாதவர்கள், நேரடியாகவும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வரவேற்புக்கு ஏற்ப தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.