விருதுநகர், மே 15: பள்ளி பாடத்தில் சட்டப்படிப்பு குறித்த பகுதிகள் சேர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகளை பொறுப்புள்ள உயர்ந்த குடிமக்களாக மாற்றுவது அரசு மற்றும் அனைவரின் கடமை. இன்றைய இளைய சமூகத்தின் சில செயல்பாடுகள் சிறிது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
பள்ளி பருவத்திலேயே பாலியல் வன்முறை குறித்த சட்டம், பொது சொத்துக்களை நாசம் செய்தால் கிடைக்கும் தண்டனை, போதை பொருள் சட்டம் போன்ற சட்டங்களை ஒரு பகுதியாக பாடத்திட்டத்தில் சேர்க்க பரிசீலித்தால் மாணவர்கள் இளம் வயதிலேயே இதுதொடர்பான விழிப்புணர்வை பெற வாய்ப்பு கிடைக்கும்.
கேரள அரசு பள்ளி பாடத்திட்டத்தில் சட்ட படிப்பை ஒரு பாடமாக கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, மாணவர்களின் நலன்கருதி தமிழக கல்வித்துறையும், தமிழக அரசும் பள்ளி பாடத்திட்டத்தில் சட்டம் குறித்த பகுதிகளை சேர்க்க பரிசீலனை செய்ய முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
