அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி வேண்டும்

ஆர்.எஸ்.மங்கலம், மே 15: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவம் செய்யும் வகையில் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில், எக்ஸ்ரே வசதி இல்லாததால் இப்பகுதியில் விபத்தில் சிக்கும் நபர்களை இங்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து இங்கிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில், உள்ள ராமநாதபுரம் அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில் எக்ஸ்ரே மற்றும் பிரசவ அறுவை சிகிச்சை அரங்கம் போன்றவை இல்லாததால் அவசரகால சிகிச்சைக்கு இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லாமல் போய் விட்டது. எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மேற்கண்ட மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: