தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு

ஊட்டி, மாா்ச் 2: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகம் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளதாக, தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது. அன்றைய தினத்தில் இருந்து ேதா்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுபாட்டில் நீலகிரி மாவட்டம் வந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 26ம் தேதி வெளியிட்ட அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் என 9 பறக்கும் படை குழுவினர், 9 நிலை கண்காணிப்பு குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு, 3 தேர்தல் செலவின கண்காணிப்பு குழு, 3 தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழு என மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ‘சி விஜில்’ என்ற ஆப் மூலமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4,200 பேருக்கு இந்த வாரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது, என்றார்.

Related Stories: