ஜெயங்கொண்டம், மே 8: ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனை வளாகத்திற்கு முன்பாக வாயிற் பகுதியில் மழைநீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்காக மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று முனதினம் பெய்த மழை காரணமாக மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே வாசல் முன்பாக குளம் போல் மழை நீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது .
இதற்கு காரணம் அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததே காரணம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு மழை காலங்களிலும் இதுபோல் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மழைநீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல் தேங்கி அதில் கொசு புழு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாய சுழல் ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது.எனவே இதற்கு ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இருந்து கழுவந்தோண்டி மேம்பாலம் செல்லும் வரை இருபுறமும் மழை நீர் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
