ஊட்டி,மார்ச்1: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கேரள சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுபாட்டில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 10க்கும் குறைவாகவே பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி மொத்த பாதிப்பு 8,340 ஆக உள்ளது. இதனிடையே கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நீலகிரி மாவட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். அவர்கள் மூலமாகவோ அல்லது பல்வேறு பணிகளுக்காக கேரளா சென்று வருபவர்கள் மூலமாகவோ பரவி விட கூடிய அபாயம் உள்ளது. கேரளா எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்குள் தொற்று பாதிப்பு பரவிவிடாத படி இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.