பெண் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

நாமக்கல், பிப்.26: நாக்கல்லில் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர், நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக  ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவர் ஜெயக்கொடி, சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கி பேசினர். சாமியானா பந்தல் அமைத்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், மதியம் நன்செய் இடையாறை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் குர்ஷித் பேகம் (45) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நாமக்கல் எம்பி சின்ராஜ், நகர திமுக பொறுப்பாளர்கள் ராணா. ஆனந்த், சிவக்குமார், பூபதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதவு தெரிவித்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: