ஆடு மேய்த்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

ஆத்தூர், பிப்.25:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன்(35). விவசாயி. இவரது மகன் சுதீஷ்(9), நேற்று கிராமத்தின் ஏரிக்கரையோரம் உள்ள விவசாய தோட்டத்தின் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது, கிணற்றில் ஓரமாக சென்ற ஆட்டை விரட்டியபோது கால் தவறி சுதீஷ் கிணற்றில் விழுந்தான். கிணற்றில் விழுந்த சுதீஷீன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கிணற்றில் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் சிறுவனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் கிணற்றில் மூழ்கிய சிறுவன் சுதீஷை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, தலைவாசல் போலீசார் சுதீஷீன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: