2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் அரசு ஊழியராக பதவி வழங்கக்கோரி

வேலூர், பிப்.24:அரசு ஊழியராக பதவி வழங்கக்கோரி 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமிர்தவள்ளி தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அகவிலை உடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறுகின்ற போது பணி கொடையாக ஊழியர்களுக்கு ₹10 லட்சமும் உதவியாளர்களுக்கு ₹5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, 2வது நாளாக நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: