தேயிலை கழிவுகளை வாங்கி கலப்பட தூள் தயாரிப்பதாக புகார்

ஊட்டி, பிப். 24: அசாம் மாநிலத்தில் இருந்து ஆர்சி., எனப்படும் தரமற்ற தேயிலை கழிவுகளை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தொழிற்சாலைகளில் கலப்பட தேயிலை தூள் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிைல விவசாயம் சுமார் 55 ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மார்க்கெட் உள்ளது.

16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.  இந்த நிலையில், தேயிலை தூளில் கலப்படம் செய்து விற்பனை செய்வது அதிகமாக உள்ளது.  கடந்த ஆண்டு கோத்தகிரி அருகேயுள்ள குஞ்சப்பனை பகுதியில் 5 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதேபோல் ஊட்டி அருகேயுள்ள சோலூர் பகுதியில் கலப்பட தேயிலை தூள் தயாரித்த தனியார் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.   இந்நிலையில் தற்போது இயற்கை உரம் தயாரிப்பதாக கூறி அசாம் மாநிலத்தில் இருந்து ஆர்சி., எனப்படும் தரமற்ற தேயிலை கழிவுகளை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தொழிற்சாலைகளில் கலப்பட தேயிலை தூள் தயாரிப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்சி., எனப்படும் தேயிலை கழிவுகளை வாங்கி அதனை, இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்த உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் குறித்து தேயிலை வாரியத்திடம் கேட்டிருந்தார். இதில் 23 நிறுவனங்கள் அதுபோன்று உரிமம் பெற்றிருப்பதாக தேயிலை வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சில பிரபல நிறுவனங்களை தவிர கோவை, திருப்பூர், மேட்டுபாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளை சேர்ந்த நிறுவனங்களும் உரிமம் பெற்றிருந்தது. தெரியவந்தது.

 சமவெளி பகுதிகளில் உள்ள அந்த நிறுவனங்கள் தரமற்ற தேயிலையை ெகாண்டு இயற்கை உரம் தயாரிக்க ஏதேனும் அனுமதி பெற்றுள்ளதா? என வேளாண்துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வேளாண் துறையிலும் தகவல் கேட்டுள்ளார். ஆனால் அது போன்று எந்தவித அனுமதியையும் அந்த நிறுவனங்கள் பெறவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்காக ஆர்சி., தேயிலை கழிவுகளை வாங்கும் நிறுவனங்கள், அதனை கொண்டு இயற்கை உரம் தயாரிக்காமல் தேயிலை கழிவுகளை வாங்கி அவற்றுடன் தேங்காய் நார் ேபான்றவற்றை சேர்த்து அவற்றை நல்ல தூளுடன் கலந்து கலப்பட தேயிலை தூள் தயாரிக்க சில தனியார் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது இதுகுறித்து தேயிலை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘தேயிலை கழிவுகளை வாங்கும் நிறுவனங்கள் அவற்றை என்ன செய்கிறார்கள் என்பதை தேயிலை வாரியம் கண்காணிப்பதுடன், ஆய்வு நடத்துவதும் அவசியம். அதனை கலப்பட தூள் தயாரிக்க பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: