செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் படிபூஜை விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் ஏறுவதற்கு சுமார் 200 படிகள் உள்ளன. சித்திரை பிறப்பன்று இந்த படிகளுக்கு படிபூஜை நடைபெறும். அதேபோல் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை 41 -ம் ஆண்டு படி பூஜை விழா கோலாகலமாக நடந்தது. படி பூஜை விழாவை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கரும்பை ஏந்தி மலையை சுற்றி அரோகரா… என்ற பக்தி கோஷத்துடன் கிரிவலம் வந்தனர். பின்னர் திருவிளக்கு பூஜை, படி பூஜை நடந்தது.

இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், மருதடி, நாரணமங்கலம், இரூர், பாடாலூர், குரூர், நக்கசேலம், சிறுவயலூர், மாவலிங்கை, பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், செஞ்சேரி, குரும்பலூர், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துக் கொண்டு படியில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அதனையடுத்து தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: