கட்னி: மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் பல்வேறு வேலைகளை செய்வதற்காக பீகார் மாநிலம் அராரியா பகுதியில் இருந்து 6 முதல் 13 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் மத்தியபிரதேசம் வழியாக ரயிலில் கடத்தி வரப்படுவதாக குழந்தைகள் நலக்குழு ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்தது. அதனடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் இணைந்து ம.பி மாநிலம் கட்னிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த பாட்னா-பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்டனர்.
அப்போது, அந்த ரயிலின் சில பெட்டிகளில் உரிய ஆவணங்களின்றி அழைத்து வரப்பட்ட 163 சிறுவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். அவர்களில் சிலர் கட்னி மற்றும் சிலர் ஜபல்பூரில் உள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த 8 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
