சில்லிபாயிண்ட்…

* கொல்கத்தா அணியில் விரைவில் பதிரனா?
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவுக்கு, உடல் தகுதி இல்லை எனக் கூறி, ஆட்சேபம் இல்லாச் சான்று அளிக்க, இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்தது. இந்நிலையில், பதிரனா, உடல் தகுதிக்கான சோதனையில் தேறி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், பதிரனா ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆட்சேபம் இல்லா சான்று கிடைக்கும் என்பதால், விரைவில் கொல்கத்தா அணியில் இணைய உள்ளார். வரும் 14ம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணிக்காக பதிரனா ஆடுவார் என கூறப்படுகிறது.

* ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 19வது ஓவரின்போது டெல்லி வீரர் நிதிஷ் ராணா, 4வது நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் தரப்பட்டது. அதேபோல், சிஎஸ்கே அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

* சீரி ஏ கால்பந்து ஜுவன்டஸ் வெற்றி
பெர்காமோ: இத்தாலியில் முன்னணி கால்பந்து அணிகள் பங்கேற்று வரும் சீரி ஏ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. பெர்காமோ நகரில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் ஜுவன்டஸ் – அட்லாண்டா அணிகள் மோதின. துவக்கம் முதல் இரு அணிகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டின. போட்டியின் 48வது நிமிடத்தில் ஜுவன்டஸ் அணியின் ஜெரீமி போகா முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். இருப்பினும் அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் போட முடியவில்லை. அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் வெற்றி வாகை சூடியது.

Related Stories: