வாலாஜாவில் பங்குனிமாத பிரம்மோற்சவம்: ஸ்ரீஏகாம்பரநாதர் 1 டன் மலர் அலங்காரத்தில் பவனி

 

வாலாஜா: வாலாஜாவில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் 1 டன் மலர் அலங்காரத்தில் பவனி வந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள காமாட்சிஅம்மன் சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நிறைவு நாளான நேற்று லட்சதீப விழா, தவன உற்சவம் நடந்தது. வாலாஜாவில் உள்ள புஷ்ப வியாபாரிகள் சார்பில் நடந்த இந்த உற்சவத்தில், சுவாமி, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

பின்னர் ரூ.2 லட்சம் மதிப்பில் 1 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் ஊர்வலமாக பவனி வந்தனர். மாடவீதியாக வந்த ஊர்வலத்தை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வாலாஜாவில் உள்ள புஷ்ப வியாபாரிகள் தொடர்ந்து 76 ஆண்டுகளாக இந்த உற்சவம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி நகரில் உள்ள கடைகள், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தெருக்களில் வண்ணக்கோலங்கள், தோரணங்கள் கட்டப்பட்டது.

Related Stories: