தோகைமலை. பிப். 19: தோகைமலை பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கனிசமான அளவில் குறுவை சாகுபடி நடவுகள் துவங்கப்பட்டு உள்ளது. தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூரியனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசோி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை கணிசமான அளவில் பெய்து காவிரிக்கு நீர்வரத்தும் வர தொடங்கியது. இதனால் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்று பாசன விவசாயிகளும் கிணற்றுப்பாசன விவசாயிகளும் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்தனர். அதனை தொடர்ந்து குறுவை சாகுபடியை தொடங்கி உள்ளனர். இதில் அட்ய பொன்னி, கோ 51, எஎஸ்பி 16, ஆடுதுரை 36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து உள்ளனர்.