சென்னை, ஏப்.5: தமிழக சட்டமன்ற் அதேர்தல் இம்மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து 24மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செங்கல்பட்டு நோக்கி வந்த ஒரு காரை சோதனையிட்டபோது உரிய ஆவணங்களின்றி 35 சவரன் நகைகள் 10 கிராம் தங்கக்காசு, 50 கிராம் எடையுள்ள இரண்டு வெள்ளி பிஸ்கட் மற்றும் ரூ.6லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கியது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்தபோது, கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் அவரது மனைவி ஜோஷி என தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து மகாபலிபுரத்தில் உள்ள செரிடன்ட் ஸ்டார் ஓட்டலில் முன்கூட்டியே அறை பதிவு செய்து திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லவதால் வீட்டில் நகை பணம் வைத்துவிட்டு வந்தால் பாதுகாப்பு இல்லை என்பதற்காக தங்க நகைகள் மற்றும் பணத்தை கையிலேயே கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் 35 சவரன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களை காண்பித்து நகை, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
