சென்னை, ஏப்.2: படைப்புலகின் உயரிய விருதுகளில் ஒன்றான மா.அரங்கநாதன் விருது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் தந்தை மா.அரங்கநாதன் பெயரில் வழங்கப்படும் இந்த விருது கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத்துறையில் பல ஆண்டுகள் சாதனை படைத்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2026ம் ஆண்டுக்கான விருதுக்கு சிறந்த படைப்பாளிகளான கி.விட்டல்ராவ், அம்ஷன் குமார் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை சென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்குகிறார்.
