சென்னை, ஏப்.5: போர் காரணமாக ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர். போர் காரணமாக ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் ஆர்மீனியா நாட்டில் இருந்து சிறப்பு தனி விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணி அளவில், சென்னை வந்தனர். அவர்கள் அனைவருக்கும் முறையான பாஸ்போர்ட்டுகள் இருந்ததால், குடியுரிமை சோதனை பகுதியில் தாமதம் எதுவும் ஏற்படாமல் இரவு 7.30 மணி அளவில் விமான நிலையத்திலிருந்து வெளியில் வர தொடங்கினர். அவர்களை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த தனி விமானத்தில் வந்த 345 மீனவர்களில் 327 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் கேரளாவை சேர்ந்த 10 மீனவர்கள், புதுச்சேரியை சேர்ந்த 5 மீனவர்கள், குஜராத்தை சேர்ந்த 2 மீனவர்கள் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஒரு மீனவரும் வந்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 327 பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 175, திருநெல்வேலி மாவட்டம் 80, ராமநாதபுரம் 19, மயிலாடுதுறை 17, நாகப்பட்டினம் 4, மற்றவர்கள் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து 6 சிறப்பு பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. அந்த பேருந்துகளில் மீனவர்கள் அனைவரும் ஏற்றப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, 40 நாட்களுக்கு மேலாக ஈரானில் தவித்துக் கொண்டிருந்த எங்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வந்த இந்திய அரசுக்கு எங்கள் நன்றி என்றனர்.
