8 மாதமாக பணி வழங்காததால் உபி ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

புதுடெல்லி: எட்டு மாதமாக பணி வழங்காததால் பாதிக்கப்பட்ட உபி தலித் ஐஏஎஸ் அதிகாரி ரிங்கூ சிங் ரஹீயின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. உத்தரபிரதேச கேடர்(2002 பேட்ச்) ஐஏஎஸ் அதிகாரியான ரிங்கூ சிங் ரஹீ தற்போது லக்னோவில் உள்ள வருவாய் வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த 8 மாதங்களாக வரையறுக்கப்பட்ட எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். முறையான பணிகள் ஒதுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டதாகவும், ஊழலை எதிர்த்து போராடியதால் நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும் கூறிய ரிங்கூ சிங் ரஹீ, தனது ராஜினாமா முடிவு தார்மீக ரீதியானது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரிங்கூ சிங் ரஹீயின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்க கூடாது என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ராஜேந்திர பால் கவுதம் கூறுகையில், “இந்த காலகட்டத்திலும் ஒரு தலித் இளைஞர் ஐஏஎஸ், பிசிஎஸ் அதிகாரியாக கடினமாக உழைக்கும்போது அவர்கள் துன்புறுத்தலை சந்திக்க நேரிடுகிறது. ரிங்கூ சிங் ரஹீயின் ராஜினாமாவை ஏற்க கூடாது. மேலும், அவருக்கு பணி வழங்க உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: