பத்மநாபசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆறாட்டு ஊர்வலம்

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இவ்வருட திருவிழா கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கியது. பள்ளி வேட்டை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று மாலை ஆறாட்டு ஊர்வலம் நடைபெற்றது. யானை மீது சுவாமி விக்கிரகங்கள் வைக்கப்பட்டு கோயில் முன்பிருந்து ஆறாட்டு ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக சங்குமுகம் கடலை அடைந்தது. பின்னர் கடல் தண்ணீரில் சுவாமிக்கு ஆறாட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஊர்வலம் மீண்டும் விமானநிலைய ஓடுபாதை வழியாக கோயிலை அடைந்தது. ஆறாட்டு ஊர்வலம் செல்வதை முன்னிட்டு நேற்று மாலை 4.45 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் இந்த நேரத்தில் செல்லவேண்டிய விமான சேவை மாற்றியமைக்கப்பட்டது.

Related Stories: