துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்கியதுடன், பிரதான வழக்கை விசாரிக்குமாறு சென்னை உயர் நிதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதை மறைத்து, அரசியல் உள்நோக்கத்தோடு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காக மாநில அரசுக்கு வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரண்பாடானது என்று கூறமுடியாது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பல்கலைக்கழங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. எனவே, இந்த வழக்கை அபாராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: