சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூட்டத்திற்கு பின் திமுக கூட்டணி சார்பில் சிவகங்கையில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னத்தில் நான் ஏற்கனவே போட்டியிட்டது குறித்து கேட்கிறீர்கள். அது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவில், ஜெயலலிதாவுக்காக விழுந்த வாக்குகள். எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்கவில்லை. கும்பிட்டு விழுந்து தான் அந்த பதவியை வாங்கினாரே தவிர, அவர் முதல்வராக வேண்டுமென்று யாரும் ஓட்டு போடவில்லை. முக்குலத்தோர் சமுதாயத்தை திட்டமிட்டு அவர் புறக்கணித்து வருகிறார். இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக நடந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் திண்டுக்கல்லில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட பெருமைமிக்க சமுதாயத்தை புறந்தள்ளி ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை, அரசியல் அடையாளமற்றவராக மாற்றுவதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.
எப்போது மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட துவங்கினாரோ, அப்போதே அவரை விட்டு வெளியே வந்து விட்டோம். இனி ஒரு காலத்திலும் நான் எடப்பாடியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அது அப்போது இரட்டை இலை. இப்போது அது ஒத்தை இலை. அதுவும் செத்த இலை. இனிமேல் யார் அதை மதிக்கப் போறாங்க? ்அதுலயும் ஒத்தை இலை எங்க இருக்குன்னா பிஜேபி கிட்ட இருக்கு.. இரட்டை இலையில ஒரு பக்கம் தாமரை இருக்கு… ஒரு பக்கம் செத்த இலை இருக்கு. என்னை போய் அதிமுக வேட்பாளர் ரவுடி எல்லாம் இறக்கி இருக்கீங்கன்னு சொல்கிறார். வடிவேலு ஒரு படத்துல ‘நானும் ரவுடி… நானும் ரவுடிதான்’ என சொல்வார் இல்லையா? எடப்பாடி என் மீது பொய் வழக்குகளை போட்டு, அரசியல் சூழ்ச்சிக்காக ரிமாண்ட் பண்ணி உள்ளே வைத்தார். என்னை ரவுடி மாதிரி சித்தரித்தார். ஆக்சுவலா ஒரிஜினல் ரவுடி அவர்தான். நான் கிடையாது.
இவ்வாறு கூறினார்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாந்தலட்சுமி போட்டியிடுகிறார். பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பாக, அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தர்மபுரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தேர்தல் அலுவலகத்தில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி மறுத்த நிலையில், சாந்தலட்சுமி, அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதியமான்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி மாது, சுற்றுலா பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறி செயல்பட்டதாக, நாதக வேட்பாளர் மீது அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேர்தல் நடத்தை விதியை மீறியது தொடர்பாக போலீசார் 2 பிரிவின் கீழ் சாந்தலட்சுமி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
