* திருவொற்றியூர்- மார்க்சிஸ்ட்,
* பல்லாவரம், திருத்தணி-தேமுதிக
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் திருவொற்றியூர்- மார்க்சிஸ்ட், பல்லாவரம், திருத்தணி-தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதி, விசிகவுக்கு 8 தொகுதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தொகுதி, மதிமுகவுக்கு 4 (3 உதயசூரியன் சின்னம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதி (ஏணி சின்னம்), மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதி (உதயசூரியன் சின்னம்), கொமதேகவுக்கு 2 தொகுதி (உதயசூரியன் சின்னம்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல எஸ்டிபிஐ கட்சி, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் ஆகிய 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் திமுக 164 இடங்களில் போட்டியிடுகிறது. மதிமுக 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி- 2, கொமதேக- 2, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 11 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த வகையில் 175 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண்கிறது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பான பட்டியலை அந்தந்த கட்சிகள் சார்பில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவிடம் அளிக்கப்பட்டது. அந்த தொகுதிகள் தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழு கூட்டணி கட்சிகளுடன் 3 நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். காங்கிரஸ்: பொன்னேரி (தனி), பெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, வைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட்: தளி, திருத்துறைப்பூண்டி (தனி), வில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட்: கீழ்வேளூர் (தனி), கந்தர்வகோட்டை (தனி), பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள்:
காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ரூட்டி ஆகிய 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக: மதிமுகவுக்கு (உதயசூரியன்-3, தனிச் சின்னம்-1) மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) – தனிச் சின்னம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக: விருத்தாசலம், விருதுநகர், தர்மபுரி, குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மயிலம் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: பாபநாசம், வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) திருச்செங்கோடு, பொள்ளாச்சி தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்) நாகப்பட்டினம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்குலத்தோர் புலிப்படைக்கு (உதயசூரியன்) சிவகங்கை, மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) சிதம்பரம், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு (உதயசூரியன்) நன்னிலம், தமிழர் தேசம் கட்சிக்கு (உதயசூரியன்) நத்தம் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
