சேலம், மார்ச் 29: தமிழ்நாடு- பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நாளை (30ம் தேதி) நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கின்றனர். 23 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடக்கும் இந்த தேர்தலில், 143 பேர் போட்டியிடுகின்றனர். சேலத்தில் 2444பேர் வாக்களிக்க உள்ளனர். சேலத்தில் தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் எம்.பி. ராஜாவும், மேற்பார்வையாளராக மூத்த வழக்கறிஞர்கள் ஜெகநாதன், விவேகானந்தன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் இருந்து வாக்குசீட்டுகள் 10 பெட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தேர்தல் அதிகாரியான எம்.பி.ராஜா, மாவட்ட நீதிபதி ஆகியோர் அதனை பெற்றுக்கொண்டனர். பெட்டிகள் அனைத்தும் நீதிமன்றத்தில் தனியறையில் வைக்கப்பட்டது. 7 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, ஓமலூர், இடைப்பாடி ஆகிய இடங்களுக்கான வாக்குசீட்டு இன்று கொண்டு செல்லப்பட்டு, பொறுப்பு நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவை திங்கள்கிழமை காலை, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கும்.
