தஞ்சாவூர், மார்ச் 28: தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜராஜேஸ்வரி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று தஞ்சையை அடுத்த பொய்யுண்டார்குடிக்காடு கால்நடை மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி பணிகள் முறையாக செலுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
மேலும், கால்நடை வளர்ப்போர் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு தாது உப்பு வழங்கப்படும் விவரத்தையும் அவர் கேட்டறிந்தார். அப்போது, ஒரத்தநாடு பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், கால்நடை மருந்தக பகுதிகளை சுத்தம் செய்தனர். அவர்களை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி பாராட்டினார். ஆய்வின் போது கால்நடை உதவி மருத்துவர் செய்யது செரீப், பேராசிரியர்கள் அருள், திருமகள், சுகாசினி ஆகியோர் உடன் இருந்தனர்.
