புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கேரளா மாநிலத்துக்கு ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய நிலுவை மானியங்கள் மற்றும் தொகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “ஒன்றிய மானியங்களுக்கான ஒப்புதல் அளிப்பது ஒரு விஷயம் என்றால், அந்த தொகையை மாநிலங்கள் முறையாக கோரி பெறுவது என்பது மற்றொரு விஷயம். தேசிய பேரிடர் தடுப்பு நிதியின் ஒருபகுதியாக கேரள மாநிலத்துக்கு ரூ.311.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் நிலச்சரிவால் பாதிக்கப்படட வயநாடு பகுதிகளில் இடர்குறைப்பு திட்டத்துக்கு ரூ.72 கோடி அடங்கும். வயநாடு பேரிடருடன் தொடர்பில்லாத காட்டுத் தீ தணிப்பு திட்டத்துக்கு ரூ.17.73 கோடியும், திருவனந்தபுரம் நகரத்துக்கான நகர்ப்புற வௌ்ள அபாய மேலாண்மை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் ரூ.222.22 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியை கேரள அரசு இதுவரை முறையாக கோரி பயன்படுத்தவில்லை. ஒன்றிய அரசு அடுத்தக்கட்ட நிதியை விடுவிக்க வேண்டுமானால், மாநில அரசு ஏற்கனவே பெற்ற நிதியை எவ்வாறு பயன்படுத்தியது என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசு முறையாக விண்ணப்பித்து, கோரிக்கை விடுத்து அதற்கான விவரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே நிதியை விடுவிப்பேன் ” என்றார்.
