சத்தியமங்கலம், பிப்.17: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது, வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் வனத்தை விட்டு வெளியேறி புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை திம்பம் மலைப்பகுதியை அடுத்துள்ள ஆசனூர் அருகே சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. யானை சாலையில் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தினர்.