சுவிஸ் ஓபன் பேட்மின்டன்: காலிறுதிச் சுற்றில் கால்பதித்த தருண்; மலேசிய வீரரை வீழ்த்தி அசத்தல்

பேசல்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். சுவிஸ் ஓபன் பேட்மின்டன் போட்டிகள், பேசல் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, மலேசிய வீரர் ஜஸ்டின் ஹோ ஷோ வெ உடன் மோதினார். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய தருண் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஜஸ்டின் ஈடுகொடுத்து ஆடியதால், இழுபறி நீடித்தது. கடைசியில் அந்த செட்டை 22-20 என்ற புள்ளிக்கணக்கில் தருண் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் கோகி வடனபே, தைவான் வீரர் சு லி யாங் மோதினர். இப்போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வடனபே 21-10, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: