நெல்லை: நெல்லை, மேலப்பாளையம் குறிச்சி அருகே அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சேகர் (41). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 2023ல் விளையாடிக் கொண்டிருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்நிலையில் சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்ததையடுத்து, பெற்றோர் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் நேற்று அளித்த தீர்ப்பில், இது சமூகத்தில் நடைபெறும் அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி பெண் குழந்தைகளை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார். அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார். சாட்சி மற்றும் ஆதாரங்களை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க விரைந்து செயல்பட்ட போலீசாரை நெல்லை மாநகர கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டினார்.
