சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி வதந்தி பரப்பும் தவறான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி தவறான நபர்கள் சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர் என அறியப்படுகிறது. இது அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிரான மற்றும் தவறான செயல். இது போன்ற தவறான தகவல் மற்றும் கடிதங்கள் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், இது போன்ற தகவல், கடிதங்கள் ஏதேனும் பெற்றிருந்தாலும் அல்லது பெறப்பட்டாலும் பொது மக்கள் யாவரும் பயப்படவும், பதற்றப்படவும் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்று தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது யார் மீதாவது சந்தேகம் இருந்தாலோ தலைவர்/ முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஏடிஆர் கட்டிடம், வடக்கு கோட்டை சாலை, உயர் நீதிமன்ற வளாகம், சென்னை – 600104 என்ற முகவரியில் நேரில் அணுகலாம் அல்லது 044-2955 1065 என்ற தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
